மூழ்கிய ஈரானிய கப்பலின் இறுதி நிமிடங்கள் ; வெளியான தொலைபேசி உரையாடல்
இலங்கைக்கு அப்பாலான கடற்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலின் இறுதி நிமிடங்களில் நிகழ்ந்த வாக்குவாதம் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல்மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில், அண்மையில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'டெனா' (Dena) எனும் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் பலியான மாலுமி ஒருவர், தாக்குதலுக்குச் சற்று நேரத்திற்கு முன்னர் தனது தந்தையுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை தொடர்பில் 'ஈரான் இன்டர்நேஷனல்' செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்கப் படைகள் கப்பலை விட்டு வெளியேறுமாறு இரண்டு முறை எச்சரிக்கை விடுத்த போதிலும், கப்பலின் கட்டளை அதிகாரி (Commander) மாலுமிகளை வெளியேற அனுமதிக்கவில்லை என அந்த மாலுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மாலுமிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த மாலுமி தனது தந்தைக்கு அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த பல மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
உயிர்காப்புகள் மூலம் தப்பித்த 32 மாலுமிகள் மாத்திரமே உயிர் பிழைத்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஒரு எதிரி நாட்டின் போர்க்கப்பலை நீர்மூழ்கிக் குண்டு மூலம் மூழ்கடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையில், 'டெனா' கப்பலில் இருந்து தப்பிய 32 மாலுமிகளும், இலங்கையினால் மீட்கப்பட்ட மற்றுமொரு ஈரானியக் கப்பலான 'IRIS Booshehr' இலிருந்து மீட்கப்பட்ட 208 மாலுமிகளும் இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மூழ்கடிக்கப்பட்ட ஐரிஸ் டெனா கப்பலிருந்த சுமார் 104 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.
இதனிடையே, முன்னதாக இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலிலிருந்து 86 உடலங்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.