இஸ்ரேல் மீது ஈரானின் புதிய அலை ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பம்
சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இன்று பாரிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட 7 ஆளில்லா வானூர்திகளை (Drones) அந்நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி மீண்டும் ஒரு புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைச் சுட்டு வீழ்த்தத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இரு நாடுகளும் அதியுச்ச பாதுகாப்பு விழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.
இதனிடையே, தெற்கு லெபனானில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படையினர் மீது தமது அமைப்பு, மீண்டும் பல தடவை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள யாரூன் மற்றும் அத்-துஹைரா ஆகிய எல்லை நகரங்களுக்கு அருகில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படையினர் மீதே, தாம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
மரூன் அல்-ராஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலியப் படைகளை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது இஸ்ரேலிய படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டதாகவும் ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.