ஈரானின் குழப்பமான வெளிவிவகார கொள்கை ; ஐக்கிய அரபு அமீரகம் கடும் சாடல்
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், ஈரானின் தோல்வியடைந்த மற்றும் குழப்பமான வெளியுறவுக் கொள்கையின் வெளிப்பாடு என ஐக்கிய அரபு அமீரகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்மட்ட அதிகாரி கலாநிதி கர்காஷ் கருத்துகளை மேற்கோள்காட்டி, கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கு எதிராக ஆக்ரோஷமாகச் செயற்படுவதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர்அப்பாஸ் அராக்ஜி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை அமீரகம் முற்றாக நிராகரித்துள்ளது.

கடந்த காலங்களில் ஈரானால் ஐக்கிய அரபு அமீரகம் மீது 1,909 முறை கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், அமீரகம் மீது குற்றம் சுமத்துவது ஈரானின் தவறான வெளிவிவகாரக்கொள்கையைத் தான் காட்டுகிறது.
ஈரான் தனது இலக்கை அடையாளம் காண்பதில் தவறிவிட்டதுடன், இராஜதந்திர ரீதியில் தனது திசையையும்முதிர்ச்சியையும் இழந்துவிட்டது. எத்தகைய ஆக்ரோஷமான சூழலிலும், ஐக்கிய அரபு அமீரகம் இராஜதந்திர ரீதியிலான பொறுமையைக் கடைப்பிடிப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளது.
"ஈரானின் பயங்கரவாத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முழு உரிமையுண்டு இருப்பினும், நாமும் பிராந்தியமும் இந்தப் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளையே நாம் தொடர்ந்தும் தேடி வருகிறோம்" என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போரைத் தடுப்பதற்காக, இறுதி நிமிடம் வரை ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் நேர்மையான முறையில் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இதனை அப்பாஸ் அராக்ஜி நன்கு அறிந்திருந்தும், தற்போது இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஈரானின் தனிமைப்படுத்தலை மேலும் உறுதிப்படுத்துவதுடன், அதன் ஆக்ரோஷமான முகத்தையே உலகிற்கு வெளிப்படுத்துகிறது என ஐக்கிய அரபு அமீரகம் கடுமையாகச் சாடியுள்ளது.