மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்!
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலைப் பாதுகாக்க மூன்று நாடுகளும் நடவடிக்கை எடுத்தால், மூன்று நாடுகளுக்கு சொந்தமான பிராந்தியத்தில் அமைந்துள்ள கப்பல்கள் மற்றும் இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு இலக்கையும் தாக்குவோம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் எச்சரித்துள்ளார்.
அதேநேரம் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 20 ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாளை (15) நடைபெறவிருந்த ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக இருக்கும் ஓமானிய வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைத், ஞாயிற்றுக்கிழமை மஸ்கட்டில் நடைபெறவிருந்த ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த விடயத்தில் கருத்து தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் இல்லையெனில் எதிர்காலத்தில் மேலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை, அமெரிக்காவும் ஈரானும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓமானின் மத்தியஸ்தத்தில் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.