இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்க ஈரான் தெஹ்ரான் மீது வான் பாதுகாப்பு
இஸ்ரேலின் மற்றொரு சுற்று தாக்குதல்களைத் தொடர்ந்து தெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு தற்போது செயலில் இருப்பதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.
இத்தாக்குதலானது சற்று நேரத்திற்கு முன்னர் அதாவது சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் விதமான அமைச்சரவைக் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்களின் அடுத்த அலை விரைவில் நடத்தப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை இதனை 'X' தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, நூற்றுக்கணக்கான பல்வேறு பெலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
அத்துடன், ஈரானின் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் IRNA குறிப்பிட்டுள்ளது.
அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் விழுந்துள்ளன. இதனால், 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது.
