ஈரானின் உச்ச தலைவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொலைச் சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளே காரணம் என அந்தக் கடிதத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஜித் காதெமியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

மஜித் காதெமியை இலக்கு வைத்து தாக்குதல்
ஈரான் அதிகாரிகளின் வழக்கமான பாணியில் கருத்துத் தெரிவித்துள்ள கமேனி, "தளபதிகளின் மரணம் ஈரானியப் படைகளின் சித்தாந்தத்தில் எந்தவொரு 'குலைவையும்' ஏற்படுத்தாது, ஏனெனில் ஈரானியப் படைகளின் வரிசை மிகப்பெரியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து ஈரானின் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தனது தந்தையைத் தொடர்ந்து ஈரானின் உயர் தலைவராகப் பதவியேற்ற மொஜ்தபா கமேனி, இதுவரை பொது இடங்களிலோ அல்லது ஈரானிய அரச தொலைக்காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலோ தோன்றவில்லை.
எனினும் அண்மைக்காலமாக ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் பெயரில் கடிதங்கள் மட்டுமே வெளியாகின்றன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "மொஜ்தபா கமேனி அநேகமாக இறந்திருக்கலாம் அல்லது மிக மோசமான நிலையில் இருக்கலாம், ஏனெனில் அவரைப் பற்றி யாரும் இதுவரை கேள்விப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.
அதேசமயம் "பாதுகாப்பு காரணங்களுக்காகவே" கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை என ஜெனிவாவிற்கான ஈரானின் ஐநா தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் "நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், விவகாரங்களை முழுமையாகக் கையாண்டு வருவதாகவும்" ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி வலியுறுத்தியுள்ளார்.