ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் டூப்ளசிஸ் களமிறங்கினர். டூப்ளசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா கேப்டன் தோனி ஆகியோர் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இறுதி வரை ஆட்டமிழக்காமலிருந்த ருத்ராஜ் கெயிக்வாட் 88 ரன்கள் அடித்தார். இதில் 4 சிக்ஸ் மற்றும் 9 பவுண்டரிகளும் அடங்கும். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் ட்ரென்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன் அணி, துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக சவ்ரப் திவாரி அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடி இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர்களில் டுவைன் பிராவோ 3 விக்கெட்களையும், பக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அபுதாபியில் நாளை நடக்க உள்ள 31-வது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலன்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.