திருமணத்திற்கு விலை உயர்ந்த பரிசை வழங்கிய மணமகளின் பெற்றோருக்கு மிரட்டல்!
இந்தியாவில் உத்தரபிரதேசம் மாநிலம் - சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினரின் மகள் கவிதாவுக்கு நேற்றைய தினம் (07-02-2023) திருமணம் நடந்து முடிந்தது.
தலித் சமூகத்தை சேர்ந்த இந்த குடும்பத்தினரின் திருமண நிகழ்வின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மணமக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல விலை உயர்ந்த மேலும் சில பரிசுகளையும் குடும்பத்தினர், உறவினர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனைப்பார்த்த அப்பகுதியில் உள்ள மேல் ஜாதியினர் மணப்பெண்ணின் பெற்றோர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினர் திருமண நிகழ்விற்கு பொலிஸ் பாதுகாப்பு கேட்டு உள்ளூர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தனர்.
அந்த முறைப்பாட்டில், உள்ளூர் கிராமத்தலைவர் தங்களை உயர்ஜாதி குடும்பங்கள் செய்வது போல் நீங்களும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கக்கூடாது என்று மிரட்டினார்.

மீறினால் திருமண ஊர்வலத்தின் போது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்றும் எச்சரித்தார். எனவே திருமண விழாவிற்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து பொலிஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் படை அனுப்பி வைக்கப்பட்டது.