ஜனாதிபதியின் வீடு எரிப்பு; சஜித் பிரேமதாசவின் சகோதரியிடம் விசாரணை (Video)
இலங்கை குற்றவியல் விசாரணை திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகவே அங்கு அவர் அழைக்கபப்ட்டிருந்தார். இன்று முற்பகல் அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த துலாஞ்சலி ,
தற்போதைய ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க வருமாறு அழைத்தனர். நான் வந்து வாக்குமூலம் வழங்கினேன். சம்பவம் நடந்த போது நான் அங்கு ஓரிடத்தில் இருந்தேன். விசாரணைகளுக்கு உதவுவதற்காக என்னை வருமாறு அழைத்தனர். நான் வாக்குமூலம் ஒன்றை வழங்கினேன். விசாரணை அதிகாரிகள் நட்புறவாக உரையாடினர்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் அது முடிந்து விட்டது. எந்த பிரச்சினையுமில்லை. பல போராட்டங்கள் இருக்கின்றன. போராட்டம் என்பது ஒரு போராட்டமல்ல. ஒவ்வொருவர் தனிப்பட்ட ரீதியில் போராட்டங்களை நடத்தினர்.
விசாரணைகளுக்கு உதவ வந்து வாக்குமூலம் வழங்குமாறு கூறும் போது நாம் வந்து உண்மையை கூறினால், எமக்கு எந்த பிரச்சினையுமில்லை. அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்ததால், அழைத்து விசாரித்ததாகவும் கூறினார்.