இலங்கைக்கு ட்ரோன் தாக்குதலை தடுக்க நடவடிக்கைகள் ; பொலிஸ் நிலையங்களுக்கு சென்ற அறிவுறுத்தல்
ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ட்ரோன்களை பயன்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, அத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவை என இலங்கை பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் ட்ரோன் அல்லது மனிதரற்ற வான்வழி ஊர்திகளை இறக்குமதி செய்தல், வர்த்தகம் செய்தல் மற்றும் இயக்குதல் போன்றவை 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட வேண்டும்.
இருப்பினும், சில நிறுவனங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இத்தகைய ஊர்திகளை இறக்குமதி செய்வதாகவும், அவற்றின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, ட்ரோன்கள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் வணிக நிலையங்கள் மற்றும் பழுதுபார்க்கும் நிலையங்களை நடத்துவோர், 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு செயற்படுகிறார்களா? என்பது குறித்து இலங்கை பொலிஸார் அவதானம் செலுத்துமாறும், இது தொடர்பான தரவுகளைப் பேணுமாறும் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.