வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான தகவல்
இந்த ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி. சேனாநாயக்க,
2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
7 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக டி.டி.பி. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்களில் 65% பேர் தொழில்முறை வேலைகளுக்கும், 35% பேர் குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் சென்றதாக பொது முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டளவில், 75 சதவீத தொழிலாளர்களை தொழில்முறை வேலைகளுக்கும், 25 சதவீத தொழிலாளர்களை குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, குவைத்துக்கு 84,000 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு 55,000 பேரும், சவுதி அரேபியாவுக்கு 52,000 பேரும் அனுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணியகம் ஊடாக நேரடியாக அனுப்பப்படும் இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்காக 15,900 பேரையும், ஜப்பான் வேலைவாய்ப்புக்காக 9,000 பேரையும் தென் கொரியாவிற்கு 8000 பேரையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.