பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குறித்து வெளியான தகவல்
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
அதிகளவான முறைப்பாடுகள் சப்ரகமுவ பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பதிவாகியுள்ளன.
“இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம்” என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க, 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும்.
இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் இரகசியமாக பரிசீலிக்கப்படும் என்பதுடன், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை ஒழிப்பதற்கும், மாணவர்களை துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.