நடிகர் விவேக் மரணம் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய ஆய்வுக் குழு
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார்.

இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.