O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று காலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
2025 ஆம் ஆண்டு முதல் தேர்வுகள் மற்றும் பாடசாலை கால அட்டவணையை சீராக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
பரீட்சைகள் மற்றும் தவணைக் கால அட்டவணையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டு பல சவால்களை எதிர்கொண்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் கல்வியாண்டில் இந்த பிரச்சினைகளை சரிசெய்வதற்கான பாதையில் கல்வி அமைச்சு தற்போது இறங்கியுள்ளதென்றும் உறுதியளித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “2025 ஆம் ஆண்டின் பாடசாலை ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகும். தவறவிட்ட வகுப்புகளுக்காக கூடுதல் இரண்டு வாரங்கள் கற்பித்த செயற்பாடுகள் இடம்பெறும்.
இதன்பின்னர் ஜனவரி 20 ஆம் திகதி முதல், புதிய கல்வியாண்டு திட்டமிட்டபடி தொடரும் மேலும் உத்தியோகப்பூர்வ சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் பிற தேவையான பொருட்கள் தயாராக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
மேலும், மிகவும் தாமதமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25 ஆம் திகதி நடைபெறும்” என்றார்.
2025 ஆம் ஆண்டு முதல், நாட்டின் கல்வி முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், பாடசாலை விதிமுறைகள், தேர்வுகள் அல்லது தேர்வு அட்டவணைகளில் தாமதம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.