சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண்
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை பொலிஸாருக்கு தகவல்
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் தொடர்பில் நகை கடை ஊழியர்கள் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் கல்முனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். அத்துடன் அவர் வசம் இருந்து மாதிரி நகைகளுடன் ஏனைய சில பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சமீப காலமாக சுற்றுலா விஸாவில் இலங்கை வரும் இந்திய வியாபாரிகள் வீடு வீடாகச் சென்று தங்கநகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் மாதாந்தத் தவணை மற்றும் கடன் அடிப்படையிலும் நகை விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மிகுந்த சிரமங்களின் மத்தியில் பல இலட்சம் ரூபாவில் உள்ளூரில் முதலீடு செய்து நகைத் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் பெரும் நஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறானவர்கள் தொடர்பில் பொலிஸாரும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளீட்டு நகைத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.