இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டு?
இந்தியாவில் பிறந்த 'நாடற்றவர்' என்ற நிலையில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யுமாறு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையின் ஏதிலி தாக்கல் செய்த மனு
இலங்கையின் ஏதிலி ஒருவர் , தனது விண்ணப்பத்தை பரிசீலித்து இந்திய கடவுச்சீட்டை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி 2024 இல், தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்தபோதே, நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றின் இந்த உத்தரவு, இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணத்தை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
10 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
அதேவேளை தமிழக நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உரிய வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .
இந்தநிலையில்,இவர்கள் தொடர்ந்தும் தங்க வேண்டுமாயின் நீண்ட கால வீசாவைபெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது 10 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.