இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் ; இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (26) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த 10 மீனவர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஒவ்வொரு மீனவருக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்கவும் மன்னார் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.