யாழில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்திருந்தனர்.
அதேவேளை மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று வியாழன் அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.