நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர் உயிரிழப்பால் பரபரப்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்போது, ஏற்பட்ட விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது, கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது மீனவர்களின் படகு கடலில் கவிழ்ந்துள்ளது விபத்திற்குள்ளாகியுள்ளதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
ஏனைய மூவரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, காணாமல்போன மீனவரை தேடும் நடவடிக்கையிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்டவேளை இலங்கை கடற்படை மாலுமி ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.