இலங்கையில் முகாமிட்டுள்ள இரு நாட்டு போர் கப்பல்கள்!
இந்தியா மற்றும் சீனாவின் போர்கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. அதன்படி இந்திய கடற்படை போர்க்கப்பலான INS மும்பை, 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு இந்திய கப்பல்கள் வருகை தருவது 8ஆவது தடவையாகும். 163 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலில் 410 ஊழியர்கள் வரை பணியாற்றுகின்றனர்.
கடற்படையுடன் சேர்ந்து பயிற்சி
இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருக்கும் ஊழியர்கள், இலங்கை கடற்படையுடன் சேர்ந்து, யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுதல், கடற்கரையை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த திட்டப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் நாளை மறுதினம் இந்தியா நோக்கி மீண்டும் புறப்படவுள்ளது. குறித்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
அதேவேளை முன்னதாக, நேற்று காலை சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் அவை அங்கு நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.