ஆயுத கடத்தல்; இலங்கையிடம் உதவி கோரும் இந்தியா
விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு, இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாட இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெறுமாறு, அந்த நிறுவனம் இலங்கை அராங்கத்துக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் ஆகியவற்றுடன் மீன்பிடி கப்பலுடன் ஆறு இலங்கையர்கள், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவரும் மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த கட்டத்தல்கள் மூலம் பெறப்படும் பணத்தை, புலிகள் அமைப்பை புத்துயிர் அளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் மற்றொரு புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் தொடர்புபட்டிருப்பதாகவும், இந்திய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, தற்போது இலங்கையில் இருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குமாறு, இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.