முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மறதி! பேசுபொருளான விடயம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அருகில் சென்ற தற்போதைய சமகால அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, அவருடன் மிகவும் நெருக்கமாகக் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, புதிய அரசியல் கூட்டணிகள் ஏதும் உருவாகிறதா என்ற ரீதியில் பேசும்பொருளாக மாறியது. ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவின் மகனின் இறுதிக் கிரியைகளின் போது, இந்த உரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

உபுல் குமாரப்பெருமவின் மகனின் இறுதிக் கிரியை
இவ்வாறான நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த விசேட காட்சியைத் தான் பார்த்ததாக ஒப்புக்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச, எனினும் அன்று பிரதி அமைச்சர் தன்னிடம் என்ன விடயங்களைத் தெரிவித்தார் என்பது தற்போது தனக்கு ஞாபகம் இல்லை எனக் கூறி தப்பித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்துப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடம் ஊடகங்கள் வினவியபோது, சமூக வலைத்தளங்கள் ஒரு சாதாரண மனிதநேயச் சந்திப்பைப் பெரிய அரசியல் விவகாரமாகத் திசை திருப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உபுல் குமாரப்பெருமவின் மகனான இளைஞனின் திடீர் மரணத்திற்கான உண்மையான மருத்துவக் காரணத்தை மட்டுமே தாம் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியில் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துரைத்ததாகவும், அதனைத் தவிர்த்து வேறெந்த அரசியல் உடன்பாடுகள் குறித்தோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்தோ தாம் பேசவில்லை என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.