வீட்டில் செல்வம் பெருக ஆடி மாதம் முடிவதற்குள் இதை மட்டும் பண்ணுங்க
இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் திகதி அதாவது நாளைய தினத்துடன் ஆடி மாதம் நிறைவடைகிறது. அதற்குள் இந்த ஒரே ஒரு வழிபாட்டினை மட்டும் செய்தால் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள், அடிக்கடி பாதிப்புக்களை ஏற்படுத்தும் நோய்கள், திடீரென ஏற்படும் பண நெருக்கடிகள் ஆகியவை குறையும்.
அதோடு தெய்வீக அருளால் வாழ்க்கையில் முன்னேற்றமும், நன்மைகளையும் பெற முடியும்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மட்டுமின்றி அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகும். குறிப்பாக குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற மாதமாகும்.
மாதத்தில் இஷ்ட தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது, நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது, ஏதாவது வேண்டுதலை முன் வைத்து பிரார்த்தனை செய்வது ஆகிய அனைத்திற்கும் மிகவும் சிறந்த மாதமாகும்.
ஆடி மாதத்தில் பலருக்கும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இது மிகவும் விசேஷமான பலன்களை தரக் கூடியதாகும்.
இந்த ஆண்டு ஆடி மாதம் முடிவதற்குள் ஒரே ஒரு முறை குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து வழிபட்டு வாருங்கள். அதுவும் குடும்பத்துடன் சென்று, குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவது சிறந்தது.
அதோடு குலதெய்வம் கோவிலுக்கு வெல்லம் வாங்கிக் கொடுப்பது, பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பது அல்லது அன்ன தானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எப்போதும் நிறைவாக கிடைக்கும்.
வெல்லம் எப்படி விரைவாக கரையும் தன்மை கொண்டதோ, அதோ போல் உங்களின் வீட்டில் இருக்கும் துன்பங்கள் கரையும். இன்பங்களும், மகிழ்ச்சிகளும் நிறைய துவங்கும்.
இந்த வழிபாடு மிகவும் எளிமையானது என்றாலும், சிறப்புக்குரிய வழிபாடு ஆகும். குலதெய்வம் கோவிலில் செய்யும் வழிபாடுகளை போன்று, குலதெய்வம் கோவிலுக்கு செய்யும் சிறிய தானங்கள் கூட நம்முடைய குடும்பத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஞாயிறு, வியாழன் ஆகிய கிழமைகள் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாகும். உங்கள் குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் இந்த ஆடி மாதத்தில் சென்று இந்த வழிபாட்டினை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
உங்களால் பொங்கல் எதுவும் வைக்க முடியவில்லை என்றால் கூட, குலதெய்வத்தை சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள். அப்படி குலதெய்வத்தை தரிசிக்க செல்லும் போது வெறும் கையுடன் ஒரு போதும் செல்லாதீர்கள்.
பூ, மாலை, பழம் போன்ற ஏதாவது வாங்கிக் கொண்டு செல்லுங்கள். அதுவும் முடியவில்லை என்றால், வெற்றிலை பாக்கு மற்றம் ரூ.1 நாணயம் மட்டும் வாங்கிக் கொண்டு போய் குலதெய்வம் பாதத்தில் வைத்து விட்டு, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு வாருங்கள்.
குலதெய்வம் உங்களுடனேயே வீட்டிற்கு வந்து, உங்கள் குடும்பத்தை எப்போதும் காப்பாற்றும். வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவது, வீட்டிற்கு அழைப்பதற்கு சமம். இது உங்கள் கஷ்டங்களை தீர்க்கக் கூடியதாகும்.