சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இதனூடாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடிக்கடி சீனாவுக்குச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தபோதே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் மற்றும் வழங்க எதிர்பார்க்கப்படும் பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக தூதுவர் ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனாவுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் விமான சேவைகளை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.