சிறையில் நடந்த சம்பவம் ; பெண் பாதுகாவலர் உள்ளிட்ட இருவர் கைது ; பரிதாபமாக பிரிந்த உயிர்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விசேட விசாரணை
உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை மெகசின் சிறைச்சாலையில் நடந்த ஒரு சம்பவத்தில் இரண்டு கைதிகளும் சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியேறி தப்பியோட முயன்றபோது, அதனைத் தடுக்க ஒரு சிறைக் காவலர் முயன்றபோது, அங்கு நடந்த ஒரு சம்பவத்தில் அவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொரளை பொலிஸார் இது குறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.