இலங்கை வந்த இளம் ஊதுபத்தி வியாபாரியும் மைத்துனனும் அதிரடி கைது
சுமார் 04 கோடி 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டுவந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்ற முயன்ற இரு இலங்கை விமானப் பயணிகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரர் என தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்
மற்றைய நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த, ஊதுபத்தி வியாபாரத்தில் ஈடுபடும் 26 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
படோவிட்ட பகுதியைச் சேர்ந்த நபரின் சகோதரியை மற்றைய நபர் திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் நேற்று (30) அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளுக்குள் 13 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோ கிராம் 104 கிராம் எடையுடைய குஷ் ரக போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் தலைமையகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது