இந்திய உயர்ஸ்தானிகரகம் இறக்குமதி செய்த குண்டு துளைக்காத பென்ஸ் ரக சிற்றூந்து மீட்பு
கொழும்பு நுகேகொட, பாகொட வீதியிலுள்ள வாகன பழுதுபார்ப்பு நிலையமொன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு துளைக்காத (Bulletproof) சிற்றூந்தொன்று நேற்று (21) மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குண்டு துளைக்காத பென்ஸ் ரக சிற்றூந்து 2008 ஆம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், 2017 ஆம் ஆண்டு பிறகு எந்த சேவைக்காகவும் குறித்த வாகனம் இறக்குமதி செய்த, டிமோ நிறுவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
நுககொடை, பாகொடா வீதியிலுள்ள வாகன பழுதுபார்ப்பு நிலையமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் தங்கியிருப்பதாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அதிகாரிகள் குழு அங்கு சென்று சோதனை செய்தபோது, பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் இலக்கத்தகடுகள் இல்லாத குறித்த மகிழுந்து மீட்கப்பட்டதுடன் அது குண்டு துளைக்காத வாகனம் என கண்டறியப்பட்டது.
இந்த வாகனம் பற்றிய தகவல்களை சுங்கம் மற்றும் டிமோ நிறுவனத்திடம் சரிபார்த்தபோது, இது 2008 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டமை தெரியவந்தது.
இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்கும் வரை வாகனம் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாகனம் ஒரு முக்கிய நபரால் பயன்படுத்தப்பட்டதா அல்லது ஏதேனும் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய பல கோணங்களில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இது தொடர்பாக கல்கிஸையில் வசிக்கும் (43) வயதுடைய குறித்த வாகன பழுதுபார்பபு நிலையத்தின் உரிமையாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.