தையிட்டி விகாரை தொடர்பில் இன்று நீதிமன்றம் வழங்கவுள்ள முக்கிய கட்டளை ; பெரும் எதிர்பார்ப்பு
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் முகமாக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் முகமாக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள வேலியை வலி. வடக்கு பிரதேச சபையினர் அகற்ற அனுமதிப்பதா? தடை விதிப்பதா என்பது தொடர்பான கட்டளையினை இன்றைய தினம் (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றம் வழங்கவுள்ளது.
விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி" வீதி காணப்படுகிறது. அந்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவிடப்பட்டது.

காணி உரிமையாளர்கள்
அதனையடுத்து அவ்வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்றவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும், வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்கவேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்திருந்தார்.
அதனையடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸ் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால், இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு, நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே வேலியை அகற்றும் பணிகளை கைவிடவேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர். அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து, பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும், வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 8ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் அதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கவேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர்.
குறித்த மனு மீதான விசாரணையின்போது, ஒருதலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய நீதிமன்றம், வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை கடந்த 11ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அதன் பிரகாரம் தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் அன்றைய தினம் மன்றில் முன்னிலையான நிலையில், அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
அதனையடுத்து குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக இன்றைய தினம் வியாழக்கிழமைக்கு நீதிமன்றம் திகதியிட்டது.
அந்த வீதியை கையகப்படுத்தி, அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுவதன் ஊடாக, தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள சில காணிகள் விடுவிக்கப்படக்கூடிய ஏது நிலை காணப்படுவதால், இன்றைய தினம் வழங்கப்படவுள்ள கட்டளை காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.