மின்சார வாகனங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
மின்சார வாகனங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளது.
இதன்படி, பல மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு ஒருசில மாதங்களுக்குள் பல மில்லியன் ரூபாய்கள் குறையும் என்ற காரணத்தினால், மின்சார வாகனக் கொள்வனவுக்கு முன்னர், இரண்டு முறை சிந்திக்குமாறு, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சந்தை மதிப்பு
நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே,
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், முக்கியமாக சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த வாகனங்களின் சந்தை விலை, கொள்வனவு செய்த குறிப்பிட்ட காலத்துக்குள், இரண்டு முதல் மூன்று மில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
சீன வாகனத் தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் புதிய ரக வாகனங்கள் மற்றும் மேம்படுத்தல்களை வெளியிடுகிறார்கள். எனவே, இது முந்தைய தயாரிப்புகளின் விரைவான மதிப்பிழப்புக்கு வழிவகுக்கிறது. எனினும் ஜப்பானிய வாகனங்களில் அவ்வாறான நிலை இல்லை.
அந்த நாட்டின் வாகன தயாரிப்பாளர்கள் சிறிய மேம்படுத்தல்களை மேற்கொள்கின்றபோதிலும், நிலையான சந்தை மதிப்பைப் பராமரிக்கிறார்கள் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே, தெரிவித்துள்ளார்.