இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி ரணில் பணிப்புரை
அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவிடம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
800,000 ஹெக்டேயர் நெல் வயல்களில் 675,000 ஹெக்டேயர் நிலத்தில் விவசாயிகள் ஏற்கனவே பயிர்ச்செய்கையை ஆரம்பித்துள்ளதால் , 2023 ஆம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
மூன்று பருவகால அறுவடைகள்
அதோடு சில விவசாயிகள் மூன்று பருவகால அறுவடைகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும், எனவே இறக்குமதியை நிறுத்த வேண்டும் எனஅமைச்சர் தெரிவித்ததை அடுத்து வர்த்தமானியை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 2021 பெரும் போகம் தோல்வியடைந்ததால், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக 675,288 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் மேலதிக இறக்குமதிகள் தேவையில்லை எனவும், அடுத்த வருடத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய உள்ளூர் உற்பத்தி போதுமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.