மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு! சிரமத்தில் பயணிகள்
இஹல வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக, மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டியில் இருந்து 3.00 மணியளவில் நானுஓயா நோக்கி பயணித்த சரக்கு ரயில், இஹல வட்டவளை மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் ஹட்டன் புகையிரத நிலையம் வரையிலும் கொழும்பிலிருந்து வரும் ரயில்கள் நாவலபிட்டி புகையிரத நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டு பயணிகள் பொது போக்குரவத்து சேவையினூடாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் ரொசல்லவிலிருந்து மீண்டும் திரும்பி வந்த பயணிகள் பேருந்துகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மலையக புகையிரத பாதையில் சமீபக் காலமாக அடிக்கடி ரயில்கள் தடம்புரள்வதனால் ரயில் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.