கிழக்கில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் திருட்டு
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக கடற்கரை மண்ணை உரப்பையில் நிரப்பி, மோட்டார் சைக்கிள், மாட்டு வண்டிகளினூடாக கடத்தும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.
காலநிலை மாற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் இரவு வேளைகளில் இனந்தெரியாத சிலர் இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவான கடற்கரை மணலை உரப்பையிலிட்டு எடுத்துச் செல்லும் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.
இச்செயற்பாடுகள் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பகுதிகளில் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
சட்டவிரோத மணல் திருட்டு
இப்பகுதிகளில் தற்போது இரவு வேளைகளில் ரோந்து சேவைகள் இடம்பெறாத காரணத்தால் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் சட்ட விரோத மணல் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, கடந்த காலங்களில் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினரோடு இணைந்து கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்கள உத்தியோகத்தர்களும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும், அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்ட விரோதமாக மண்கடத்தல் இடம்பெற்று வருவதுடன், பாரிய மண்ணரிப்பும் இப்பகுதிகளில் ஏற்படுகிறது.