வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன்; ஜனாதிபதி ரணில் மீண்டும் உறுதி!
“நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன். அதில் ஒன்றுதான் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம். இதற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் கூட்டணியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- “20 ஆவது திருத்தச் சட்டம்தான் நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளியது.
இதனால் சர்வதேசத்திடம் இலங்கை கையேந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. நாடு மீண்டெழ அரசமைப்பில் அவசரமாகத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டி இருந்த்தது.
இந்தநிலையில், 22 ஆவது திருத்தச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் செயற்றிட்டங்களுக்கு இந்தச் சட்டம் உறுதுணையாக இருக்கும்.
எனினும், இது தற்காலிக ஏற்பாடே. போராட்டக்காரர்கள் உட்பட அனைவரும் விரும்பும் புதிய அரசமைப்பையும் நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். அதற்கான பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படும்.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
குறிப்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, இந்தச் திருத்தச் சட்டம் நிறைவேற முழு மூச்சாகப் பாடுபட்ட நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தனிச்சிறப்புக்குரியவர்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.