பெற்றோரை கொல்வேன்; யாழில் மாணவனை அச்சுறுத்தி பணம் நகை கொள்ளை!
யாழில் பெற்றோரை கொல்வேன் என 17 வயதான பாடசாலை மாணவனை போலி முகநூல் ஊடாக அச்சுறுத்தி நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு பயந்த மாணவன் குறித்த சந்தேகநபர் கேட்ட பணத்தையும் நகையையும் அவர் சொன்ன இடத்துக்குக் கொண்டு சென்று வைத்துள்ளார். தொடர்ந்து சிலநாட்கள் இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் நகைகளையும் பணத்தையும் தேடிய பெற்றோர் அவற்றைக் காணாது மகனிடம் வினவினர்.
அதன்போது உண்மையை மறைக்க முடியாத மாணவன், நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெற்றோர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகநபரை இன்று கைது செய்தனர்.
மாணவனிடம் இருந்து 3 மோதிரங்கள், 3 சங்கிலிகள், 3 காப்புகள், ஒரு சோடி தோடு மற்றும் 2 இலட்சத்து பத்தாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை சந்தேகநபர் கப்பமாக வாங்கியதை ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில், கைதான சந்தேகநபர் வேறு மோசடிகளிலும் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.