சிறைச்சாலை சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை; மறுப்பு தெரிவித்த அழகி
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஷான் ரத்வத்தே உள்ளிட்ட தரப்பினர் கீழ்த்தரமாக நடந்துகொண்ட சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கையின் திருமதி அழகுராணி பட்டம்பெற்ற புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஆண்டின் ஆரம்ப பகுதியில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக திருமதி அழகுராணி போட்டிக்கு தயாராவதால், தாம் அரசியல் நடவடிக்கையிலிருந்து முழுவதும் விலகியிருப்பதாக புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
ரோசி சேனாநாயக்கவிற்கு பின்னர் இலங்கைக்கு உலக திருமதி அழகுராணி மகுடத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், COVID நிலைமை காரணமாக தாம் கடுமையான சுகாதார வழிமுறைகளை கையாள்வதுடன், ஒரு பிள்ளையின் தாய் என்ற ரீதியில், பிள்ளையின் தேவை கருதி மாத்திரம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , பொய்யான தகவல்களை பரப்புவதற்கு முன்னர் குறித்த தரப்பினரிடம் அல்லது தம்மிடம் விசாரிப்பது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.