முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மனித எச்சம்; அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று இடம்பெற்றது.
குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில்இடம்பெற்றன.
தடயவியல் பொலிசார் மற்றும் பொலிசார் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து உடற்பாகங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த நபருடைய ஒரு கை பாகங்களை காணவில்லை என அறியமுடிகிறது.
குறித்த நபர் அணிந்திருந்த நைலோன் சாரம் ஒன்று நிறம் தெரியாத நிலையில் காணப்படுவதோடு அவர் அணிந்திருந்த சிவப்பு மற்றும் நீல நிறம் கலந்த NAUTICA என பொறிக்கப்பட்ட ரீ சேட் மற்றும் பாதணிகள் காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பொருட்களை கொண்டு குறித்த நபரை அடையாளம் காணக்கூடிய நபர்கள் யாரும் இருந்தால் முள்ளியவளை பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் யாரும் காணாமல் போனதாக தகவல்கள் இல்லை எனவும் முள்ளியவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்
இந்நிலையில் உடல் பாகங்கள் காணப்பட்ட பகுதியை சூழ பாரிய மரக்கடத்தல் இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த உடற்பாகங்கள் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுடையதா என்ற சந்தேகம் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
அப் பகுதியில் இடப்பெறும் சட்டவிரோத மரக்கடத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் வந்து மரம் அறுக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு வந்தார்களில் யாராவது கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.