யாழில் நேர்ந்த மர்ம சம்பவம் ; தனியார் காணியிலிருந்து மனித எலும்புகள் மீட்பு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து மனித எலும்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியை இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிடச் சென்ற நபர் ஒருவர், அப்பகுதியில் மனித எச்சங்கள் காணப்படுவதை கண்டறிந்து உடனடியாக அவசர சேவை இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
மனித எச்சங்கள்
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்துறை பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் போது, அக்காணிக்குள் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.
மேலும், மரத்திற்கு அருகே மனித எலும்பு சிதிலங்கள் ஆங்காங்கே சிதறிய நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மரக்கிளை ஒன்றில் இளஞ்சிவப்பு நிற டீ-ஷர்ட் ஒன்றும், அருகிலுள்ள பையில் இருந்து ஜனவரி 11ஆம் திகதி வெளியான பத்திரிகையில் சுற்றப்பட்ட மூன்று மதுபான போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பக் கட்ட விசாரணை
அத்துடன் கிழிந்த நிலையில் கறுப்பு நிற நீளக் காற்சட்டை ஒன்றும் காணப்பட்டதாகவும், அது உயிரிழந்தவருடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் உடலை விலங்குகள் இழுத்துச் சென்றிருக்கலாம் என்பதாலும் எலும்புகள் சிதறியிருக்கலாம் எனவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊர்காவற்துறை பகுதியில் அண்மையில் எவரும் காணாமல் போனதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் நீதிமன்ற பதில் நீதவான், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.