யாழில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; அதிகாலையில் பரபரப்பு
சட்டவிரோத சொத்துக் குவிப்பு மற்றும் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று (22) அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.
பிறந்த நாள் கொண்டாட்ட காணொளி
அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.