மட்டக்களப்பில் வீடொன்று முற்றாக தீக்கிரை; உடமைகளை இழந்து தவிக்கும் குடும்பம்
மட்டக்களப்பு சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் அருகில் உள்ள வீடொன்றில் இருந்த வேளையில், திடீரென வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள் கூச்சலிட்டுள்ளனர். விரைந்து வந்து பார்த்தபோது, தீ கட்டுப்பாட்டை மீறி எரிந்துகொண்டிருந்தது.

உரிமையாளரின் முகத்தில் தீக்காயங்கள்
இதன்போது வீட்டிற்குள் செல்ல முயன்ற உரிமையாளரின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயினால் முற்றாக அழிந்துள்ளன.
வீட்டில் ஏற்பட்ட மின்னொழுக்கே இந்த விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி மின்சார சபையினர் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை மின்சாரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இவ்வாறான விபத்துகளுக்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.