வைத்தியசாலை வடிகானுக்குள் குழந்தையை வீசிய கொடூர தாய்
புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியின் குளியலறையில் உள்ள வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் புத்தளம் தள வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் நேற்று (20) தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இளம் யுவதி, புத்தளத்தில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரிந்த கற்பிட்டி, அனவாசலைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த இளம் யுவதி, புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, யாருக்கும் தெரியாது இரகசியமாக குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றெடுத்த தனது குழந்தையை சந்தேக நபரான இளம் யுவதி, வைத்தியசாலையின் குளியலறை வடிகாலில் கைவிட்டுச் சென்றதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பெண்கள் விடுதிக்குப் பொறுப்பான தாதியர் ஒருவர் குளியலறையை பரிசோதனை செய்துள்ளார்.
பின்னர், குளியலறையின் வடிகானை பரிசோதனை செய்த போது, குறித்த வடிகானுக்குள் வீசப்பட்ட நிலையில் குழந்தையொன்று சிக்கி கிடப்பதை அவதானித்துள்ளதுடன், சம்பவம் பற்றி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இளம் யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மரணம் தொடர்பில் புத்தளம் பதில் நீதவான் டி.எம். இந்திக தென்னகோன், சம்பவ இடத்திற்கு சென்று, நீதவான் விசாரணையை முன்னெடுத்த பின்னர், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.