கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கோர விபத்து
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்று எரிபொருள் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து மிஹிந்தலை - பலுகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து வியாழக்கிழமை (20) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மரக்கறி லொறியின் சாரதியும் , உதவியாளருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
சாரதிக்கு தூக்க கலக்கம்
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய இருவரும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மரக்கறி லொறி யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பவுசரின் பின்புறம் மோதி வீதியின் குறுக்கே கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே இவ் விபத்துக்கு காரணம் என விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.