ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்; 4 மாணவிகள் நிலை கவலைக்கிடம்
இந்தியாவின் கர்நாடகா லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது இரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவத்தில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இந்தியாவில் ஹோலி கொண்டாட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கட்டயமாக வண்ணப்பொடியை வீசியுள்ளனர்.
விடாமல் துரத்திச் சென்ற கும்பல்
இதன்போது பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறிபோதும் கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது.
வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. சம்பவத்தால் பெற்றோர் மற்றும் பிரதேச மக்களிடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.