வவுனியா வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகளுக்கும் அனுமதி
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் 12ஆம் திகதி பௌத்த மற்றும் சைவ வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில், இருதரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு கூடுவதால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பௌத்த தேரர் தரப்பினர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

வழிபாடுகள்
வழக்கு விசாரணையின் போது, தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலும், புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளாமலும் வழிபாடுகளை நடத்த வேண்டும் என நீதிமன்றம் இருதரப்பினருக்கும் உத்தரவிட்டது.
அன்றைய தினம் சைவ மக்களின் வழிபாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என பொலிஸார் மற்றும் தேரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், வெடுக்குநாறிமலையில் வழிபடும் உரிமைக்கு தடையிட முடியாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, 12ஆம் திகதி சைவ மக்களும் வழமையான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.