விலை உயர்வே எரிவாயு வெடிப்புக்கு காரணம்!
சமையல் எரிவாயுவின் விலை உயர்வே நாட்டில் தற்போது ஏற்படும் வெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சமீபத்தில் நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் முறையான விசாரணைகள் நடைபெறுவதை உறுதி செய்வது தமது கடமை என்றும் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 233 சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தனியார் நிறுவனத்தை மேற்கோளிட்டு இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
கடந்த 6 ஆண்டுகளில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறி இதனை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், சமீபத்தில் வழக்கத்திற்கு மாறாக இடம்பெற்ற வெடிப்பு சம்பங்களை தாம் ஒப்புக்கொள்வதாகவும் கூறினார்.
இந்த வெடிப்பு சம்பவங்கள் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதன்போது மேலும் தெரிவித்தார்.