21 வயது இளைஞனுக்கு கிடைத்த நீதி ;பொலிஸார் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இளைஞர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இழப்பீட்டை பொலிசாரே சம்பளத்தில் வழங்கவேண்டும்
இதன்போது, காவல்துறை காவலில் தான் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு, இன்று நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, மனுதாரரின் அடிப்படை உரிமைகள் காவல்துறையினரால் மீறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர். தனிநபர்களின் வறுமை அல்லது சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, சட்டம் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அவர்களை பாரபட்சமாக நடத்த அரசியலமைப்பு இடமளிக்காது" என நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
இழப்பீட்டுத் தொகையான 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் வழங்கக் கூடாது எனவும், குற்றம் இழைத்த மூன்று காவல் அதிகாரிகளும் தலா 75 ஆயிரம் ரூபா வீதம் தமது சொந்தப் பணத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
மேலும், குறித்த அதிகாரிகளின் நடத்தை குறித்து தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய காவல் நிலைய ஆணைக்குழுவிற்கும் உயர் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.