கடும் மழை மற்றும் பலத்த காற்று ; பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்கு சேதம்!
மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
பாரிய மரம் ஒன்று, பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த தொழிலாளர் குடியிருப்புகள் மீது நேற்று (ஏப்ரல் 20) பிற்பகல் 2:30 மணியளவில், விழுந்துள்ளது. மரம் விழுந்த வேகத்தில் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

அந்த சமயம் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் எவருக்கும் காயம் அல்லது உயிர் ஆபத்து ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தோட்ட நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், விழுந்த மரத்தை அகற்றி வீடுகளைச் சீரமைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.