மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய நிலங்கள்!
மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பல இடங்களுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக நவகிரிக்குளத்தின் ஒரு வான் கதவு 1 அடி களுவாஞ்சிகுடி நவகிரி நீர்பாசன திணைக்கள பொறியலாளர் ளு.கிசோக்காந் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால், மட்டக்களப்பு - வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
குளத்தின் வடிச்சல் வாய்க்கால்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை கிரான், புலிபாய்ந்தகல் பிரதான வீதி போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளதன் காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இயந்திரப்படகு சேவைகள் மூலமாக மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.