பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும்
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை ஓரிரு தினங்களுக்கு தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை
இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி 75 மில்லிமீட்டரைத் தாண்டியுள்ளதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று சனிக்கிழமை மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் வகையில் மஞ்சள் நிற முதலாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொடகவெல, அயகம, பெல்மதுல்ல, கலவான, இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் எலபாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் இந்த எச்சரிக்கை வலயத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே, இப்பகுதிகளிலுள்ள மலைப்பாங்கான இடங்கள் மற்றும் வெட்டப்பட்ட நிலச்சாய்வுகளுக்கு அருகில் வாழும் மக்கள் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வடைதல், சுவர்களில் திடீர் விரிசல்கள் தோன்றுதல் மற்றும் திடீரெனச் சேற்று நீர் கசிதல் போன்ற மண்சரிவுக்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவ்விடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.