யாழில் அநாதரவான நிலையில் ஹயஸ் ரக வாகனம் ! பின்னனியில் குற்றச்செயல்களா?
யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அநாதரவான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை நேற்றைய தினம் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர்.
இலக்கத் தகடுகள் அகற்றம்
அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் வாகன உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக காணப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
வாகனத்தை கடத்தி சென்றவர்கள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டனரா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.