GSP+ வரிச்சலுகை தொடர்ச்சி ; இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனம்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகையை, தற்போதைய கால எல்லை நிறைவடைந்த பின்னர் மீளப் பெற்றுக்கொள்வதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி (Paola Pampaloni) தலைமையிலான உயர்மட்டக் குழுவினரைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் போன்ற அரசின் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் விபரங்களை முன்வைத்தார்.

மேலும், 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இக்கட்டான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவிற்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இருதரப்பு விவகாரங்களுக்கு அப்பால், உலகளாவிய அரசியல்-பொருளாதார மாற்றங்கள் மற்றும் பிராந்திய சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச பொறிமுறைகளுக்கு மதிப்பளித்து, பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்குவதற்கான தகுதிகளை மதிப்பீடு செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த உயர்மட்டத் தூதுக்குழு இலங்கையை வந்தடைந்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 27வது கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்த மதிப்பீட்டுச் செயல்முறை முன்னெடுக்கப்படுகின்றது.